Saturday, September 15, 2007

புதிய கோணத்தில் யோசியுங்கள்


எல்லோருமே நாம் கவனிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு சிலர் மட்டுமே பெரிய கூட்டங்களில் கூட கவனிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படி மரியாதை கிடைக்கிறது என்று நினைத்து பொறாமைப்படுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். நாமும் கவனிக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்வது?
என்னுடைய நண்பர் ஹரி, தற்போது உதவி இயக்குநராக இருக்கிறார். அவரிடம் கதைகளைப் பற்றி பேசும் போது, அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தை, அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்பதை பார்வையாளர்கள் யூகித்துவிடக் கூடாது. அவர்கள் என்ன யூகிப்பார்கள் என்பதை யோசித்து, அது அல்லாத ஒரு காட்சியை வைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்பார். இது எவ்வளவு பெரிய உண்மை தெரியுமா? சினிமாவில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் மற்றவர்கள் நினைப்பதை விட வித்தியாசமாக யோசித்தவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்.
மாவீரன் அலெக்ஸாண்டர் புகழ் பெற்ற கோர்டியமில் நகரில் கால் வைத்தான், தனது படைகளுடன். அந்த நகரை உருவாக்கிய மன்னன் ஒருவர் தேர் ஒன்றை மரம் ஒன்றில் மிக இருக்கமாக கட்டி வைட்த்திருந்தார். அந்த கயிற்றை அவிழ்ப்பவர் யோரோ அவர்தா ஆசிய கண்டத்தை வெற்றி கொள்ள முடியும் என்று அந்த நகர மக்கள் நம்பினார்கள். அந்த நகர மக்களின் நம்பிக்கையைப் பற்றி படை வீரர்கள் அலெக்சாண்டரிடம் சொன்னார்கள். உடன் அவரும் அதை பார்க்க விரும்பினார். அவரை அங்கு அழைத்துச் சென்றனர்.
அவரும் கடுமையாக முயற்சித்தார். முடிச்சு இருக்கமாக இருந்ததால், அவிழ்க்க முடியவில்லை. திடீரென ஏதோ தோன்றியவராக எழுந்தார். விருட்டென உடைவாளை உருவினார். அந்த முடிச்சை நிமிடத்தில் அறுத்தார். சில விநாடிகளில் முடிச்சு அவிழ்ந்தது. அவர் படைகளுடம் நகருக்குள் போனார். பல தேசங்களை வென்றார். இன்றும் சரித்திரத்தில் அவர் வெற்றி பெற்ற மனிதனாக இருக்கிறார்.
இப்படித்தான் எல்லோரும் ஒரு வழியை யோசித்தால், நீங்கள் அவர்களில் இருந்து மாறுபட்டு யோசியுங்கள். நிச்சயம் நீங்கள் வெற்றிப் பெறலாம். எல்லோராலும் நீங்கள் கவனிக்கப்படுவீர்கள். வெற்றி பெற்றவன் சொல்லுவதுதான் வேதம். எல்லோரும் லெப்ட் ரைட் என்று நடந்தால், நீங்கள் ரைட் லெப்ட் என்று நடங்கள் அத்தனை கூட்டத்திலும் நீங்கள் வேறுபட்டு நிற்பீர்கள். வெற்றி உங்கள் வசப்படும்.

Thursday, May 03, 2007

நண்பனும் கவிதையும்...



இன்றைக்கு நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 18 வருடம் எனக்கும் ஏக்நாத்துக்குமான நட்பு நீடித்துக் கொண்டே இருக்கிறது. முதலில் அவனை பார்க்கும் போது இருந்த ஈர்ப்பும், பிரமிப்பும் இப்போதும் தொடர்கிறது.
கவிதை மூலம் எனக்கு அறிமுகமானவன், ஏக்நாத். நானும் அவனும் ஓரே கல்லூரியில், அவன் தமிழும், நான் கணிதமும் படித்தோம். இருவரும் ஓரே பஸில்தான் பயணம் செய்ய வேண்டும்.
எங்கள் எல்லோரையும் விட கலராகவும், அந்த நிறத்துக்கு ஏற்றார் போல உடைகளும் அணிந்து வருவான். பஸ்சில் வரும் பெண்கள் எல்லாம் அவனிடம் பேசவே ஆர்வம் காட்டுவார்கள். ஆழ்வார்குறிச்சியில் இருந்துதான் நிறைய பெண்கள் கல்லூரிக்கு வருவார்கள். அவர்கள் அனைவருமே அவனுடன் பள்ளியில் படித்தவர்கள் என்பது எனக்கு பின்னால்தான் தெரிய வந்தது.
அவனுடைய பெயரும், அவனுடைய நடவடிக்கைகளும் வித்தியாசமாக இருக்கும். ஆரம்ப நாட்களில் அவனிடம் அதிகம் பேசியது கிடையாது. ஒரு முறை வார மலரில் ஏக்நாத்தின் கவிதை ஒன்று வெளியாகி இருந்தது. பத்திரிகையில் பெயர் வந்தால் பெரிய விஷயமாக நினைத்த காலம் அது. கவிதையே வந்துவிட்டது என்றால் சொல்லவா வேண்டும். ஊரில் எல்லோரிடமும், என் கல்லூரியில் என்னுடன் படிக்கும் நண்பன்(அதுவரையில் அவனிடம் பேசியதே இல்லை) என்று தம்பட்டம் அடித்து பெருமை பட்டுக் கொண்டேன்.
அடுத்த நாள் கல்லூரிக்கு போகும் போது பஸ்சிலேயே கவிதை நன்றாக இருந்தது என்று பாராட்டினேன். அதுதான் நாங்கள் இருவரும் பேசிக் கொண்ட முதல் நிகழ்வு. அதற்கு பின்பு, எங்களின் நட்பு, பஸிலும், ஆற்றங்கரையிலும் செழித்து வளர்ந்தது.
நான் சென்னைக்கு வேலை கிடைத்து வந்துவிட்டேன். அப்போதும் எங்களின் நட்பு தொடர்ந்தது. பின்னர் அவன் நாகப்பட்டினத்தில் இறால் பண்ணையொன்றில் வேலை பார்த்து வந்தான். அங்கிருந்தபடியே கவிதை புத்தகம் ஒன்றை வெளியிட்டான். அதை எனக்கும் அனுப்பி வைத்தான்.
பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு, சேவியர் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் படிக்க சென்றான். அப்போதும் எனக்கு கடிதம் எழுதுவான். நான் ஊருக்கு செல்லும் போது, அவனை கண்டிப்பாக பார்த்துவிட்டு வருவேன்.அவன் படித்து முடித்ததும், சென்னையில் வேலை தேடி வருகிறேன் என்று சொன்னான். நான் என்னோடு தங்கிக் கொள் என்று அழைத்து வந்தேன். அவன் வேலையில்லாமல் கஷ்டப்பட்ட போது இரண்டு பேரும், 5 ரூபாய்க்கு ரோட்டோர இட்லி கடையில் சாப்பிட்டு பொழுதை கழித்து, இன்று இருவரும் நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்க்கிறோம்.
ஓரே அறையில் இருந்த போது, அவன் எழுதிய பல கவிதைகளுக்கு முதல் வாசகனாக நான் இருந்திருக்கிறேன். இப்போதும் அவன் சினிமாவில் பாட்டு எழுதியதும், அவ்வப்போது முழுப்பாடலையும் சொல்லி மகிழ்வான். அவனுடைய கவிதைகளில் எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதில் ஒரு கவிதை என்னால் மறக்கவே முடியாது. நீங்கள் படித்தால் நீங்களும் மறக்க மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.
அந்த கவிதை...
உன் சாயலில் இருக்கும் எல்லா
பெண்களிடமும் பேசிவிடுகிறேன்...
ஆழ்வார்குறிச்சி தேரோட்டத்தில்
உன்னைப் போலவே தெரிந்த பெண்ணிடம்
பேச நினைக்கையில்...
அது நீயாகவே இருந்தாய்
பேசாமலெயே திரும்பினேன்...
அவன் அனுபவித்து எழுதிய கவிதையை நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Sunday, February 11, 2007

கருணாநிதியும்... விஜயகுமாரும்...



காவல்துறை அதிகாரிகளில் விஜயகுமாருக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு.
விரப்பனை அவர் சுட்டுக் கொன்றார் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. அவருடைய கம்பிரமும், எதையும் சரியாக செய்யும் தனித்தன்மையும் ஆளுமையும் மற்றவர்களை அவர் பக்கம் ஈர்க்கும்.
அவருடைய வெற்றிகள் பற்றி நான் பல முறை வியந்து பார்த்திருக்கிறேன். இவரால் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது என்று நினைத்திருக்கிறேன்.
2001ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதியை பேட்டியெடுக்க சிஐடி நகர் வீட்டுக்கு சென்றிருந்தேன். பேட்டி முடிந்ததும் நாட்டு நடப்புப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது, வெங்கடேசபண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட நேரம். அந்த சூடு தணியாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது. இந்த விஷயத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த விஜயகுமாருக்கு கெட்ட பெயர் வர ஆரம்பித்த நேரம். அவரை மாற்ற வேண்டும் என்று நாடார் அமைப்புகள் எல்லாம் கோரிக்கை வைத்திருந்தார்கள்.
எங்களுடைய பேச்சு வெங்கடேசப்பண்ணையாரைப் பற்றியும், தென் மாவட்டங்களில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். நானும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால், கருணாநிதி ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் இருந்தது.
வெங்கடேசப்பண்ணையார் என்கவுண்டர் விஷயத்தில் கமிஷனர் விஜயகுமார் தவறு செய்துவிட்டார் என்று நான் சொன்னேன். விஜயகுமார் பற்றி சொன்னதும், கருணாநிதி ஒரு விஷயத்தை நினைவுபடுத்தி சொன்னார்.
''அந்தம்மாக்கிட்ட அவர் செக்யூரிட்டி ஆபிசரா 91-96 வரை இருந்தார். 96ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், அவருக்கு தென் மண்டல ஐஜி பதவி கொடுத்தேன். அவரும் சிறப்பாக பணியாற்றினார். ஆனால், சில மாதங்களில் பாடர் செக்யூரிட்டி போர்சுக்கு போக அனுமதி கேட்டு என்னை சந்தித்தார். நானும் அனுப்பி வைக்க சம்மதித்தேன்.
தமிழகத்தில் இருந்து அவர் டெல்லி செல்வதற்கு முன் என்னை சந்திக்க வந்தார். 'நான் சில காலம் அவர்களிடம் பாதுகாப்பு அதிகாரியா இருந்தேன். இப்ப டெல்லி போறதுக்கு முன்னாடி அவங்களை சந்திச்சு சொல்லிட்டு போகனுமுன்னு நினைக்கிறேன். நீங்க அனுமதி கொடுக்கனும்' என்று கேட்டார். நானும் தாராளமா போயிட்டு வாங்கன்னு சொன்னேன். அந்த அம்மையாரை பார்த்துட்டுத்தான் டெல்லி போனார்.
அவர் திரும்பவும் சென்னை போலீஸ் கமிஷனரா வந்ததும், மறக்காம எனக்கு போன் செய்தார். 'நான் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரா பதவி ஏற்க போறேன். உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்' என்று கேட்டார். இத்தனை நேர்மையான அதிகாரியை பார்க்க முடியாது என்று மனசு விட்டு பாராட்டினார். விரப்பனை சுட்ட உடன் கருணாநிதிக்கு போன் செய்து தகவல் சொன்னார் என்றும் சொல்லுவார்கள்.
ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அதிகாரி என்பதால், அவருக்கு திமுக அரசில் நல்ல பொறுப்பு கிடைக்காது என்ற கருத்து உள்ளது. இப்போது கூட அவர் சட்டம் ஒழுங்கு தொடர்பான எந்த பணியிலும் இல்லை.
இரண்டு பெரிய தலைவர்களிடமும் நல்ல பெயரோடு இருக்க ஒருவரால் முடியும் என்றால், அது அவரது நேர்மையால் கிடைத்த வெற்ற்றியாகத்தான் இருக்க முடியும்.
குறிப்பு
தமிழகத்தில் ஆண்டுதோறும் எந்த பதவிக்கும் தகுதியானவர்கள் ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்படுவது உண்டு. ஏனெனில் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கு சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு வந்துவிடும். இது போன்ற பட்டியலில் கடந்த 2005ம் ஆண்டு 25 போலீஸ் அதிகாரிகள் இருந்தனர். 2006ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 11ஆக குறைந்து போய்விட்டது. இந்த ஆண்டு எவ்வள்வு குறைகிறதோ தெரியவில்லை.

Sunday, January 28, 2007

பட்டிக்காட்டாணின் பட்டணத்து அனுபவம் 1

எனது சொந்த ஊர் மைலப்பபுரம் என்ற குக்கிராமம். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் பாவூர்சத்திரத்துக்கும் கடையத்துக்கும் செல்லும் வழியில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. படித்தது வளர்ந்தது எல்லாம் அந்த கிரம சூழ்நிலையில்தான். சென்னைக்கு நான் 1993ம் ஆண்டு தினகரனில் வேலை கிடைத்து வந்தேன்.
மிகவும் சந்தோஷமாக வண்ணவண்ண கனவுகளோடு சென்னைக்கு வந்தேன். சென்னை எனக்கு பல உண்மைகளை கற்றுக் கொடுத்தது. முதல் அனுபவமே எனக்கு அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியது.
கிராமத்தில் பிறந்ததால், யார் வீட்டுக்குப் போனாலும் தண்ணீர் தருவார்கள். எங்கே சென்றாலும் தண்ணீரை தானமாக தருவார்கள். தண்ணீர் பந்தல் என்று சாலை ஓரமாக மண் பானையில் வைத்திருப்பார்கள்.அதனால்தான் கிராமத்தில் பணத்தை தண்ணி மாதிரி செல்வு பண்ணாத என்பார்கள்.
எனக்கு முதல் அனுபவம் தண்ணியில்தான்.
நீங்கள் நினைப்பது போல டாஸ்மாக் தண்ணீயில் இல்லை. குடி நீரில்.
என்னை முதன்முதலில் செய்தி சேகரிக்க அனுப்புவதற்கு முன்பு பயிற்சிக்காக மூத்த நிருபர்களுடன் சென்று அந்த பகுதிகளை பார்த்துவிட்டு வருமாறு சொல்வார்கள். ஒரு நிருபர் என்னை பஸ்சில் வருமாறு சொல்லிவிட்டு போய்விட்டார்.
நானும் மயிலாப்பூர் டேங்க் அருகில் பஸ்க்காக காத்திருந்தேன். அலுவலகத்தில் நடந்து வந்ததால், தாகம் எடுத்தது. தண்ணீர் குடிக்க நினைத்து பக்கத்தில் இருந்த கடையில் தண்ணீர் கேட்டேன். என்னை மேலும் கீழும் பார்த்தார், கடைக்காரர். என்னுடைய வார்த்தைகளை வைத்து நம்மூர்காரன் என்று நினைத்தாரா என்ன என்பது எனக்குத் தெரியாது. ஒரு பாக்கெட்டில் தண்ணீர் கொடுத்தார். என்னக்கு ஓரே ஆச்சரியம். நம்ம ஊரில் தம்ளரில் தண்ணீர் தருவார்கள். இவர்கள் பாக்கெட்டில் தருகிறார்களே என்று. சுத்தமாக இருக்கட்டும் என்று தருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். தண்ணீரை குடித்துவிட்டு, அப்படியே கிள்ம்பினேன்.
கடைகாரர், "தம்பி தண்ணீருக்கு காசு கொண்டுங்க" என்றார்
எனக்கு தூக்கிவாரி போட்டது. தண்ணீருக்கு காசா. நான் முழிப்பதை பார்த்ததும் 'ஒரு பாக்கெட் தண்ணீர் ஒரு ரூபாய்' என்று சொன்னார்.
எனக்கு கிராமத்து நினைவு வந்தது.
சின்ன கிராமம் என்றாலும் குடிநீருக்கு கோடை காலத்தில் எங்கள் ஊரில் சிரமப்பட வேண்டியதிருக்கும். நான் கல்லூரி படிக்கும் காலத்தில் தண்ணீருக்காக கிணறு கிணறாக அலைந்திருக்கிறேன்.
எங்கள் ஊரில் நல்ல டேஸ்டான தண்ணீர் செல்வின் என்பவர் குடும்பது கிணற்றில் கிடைக்கும். அவர் எனக்கு தாத்தா முறை. அவர் தீவிர அதிமுககாரர். அவருடைய தந்தையும் என்னுடைய தந்தையும் நெருங்கிய நண்பர்கள். அதனால் எங்கள் இருவர் குடும்பத்துக்கும் அவரது குடும்பத்துக்கும் நெருங்கைய தொடர்பு உண்டு.
அவர்கள் கிணற்றில் நல்ல தண்ணீர் எடுக்க ஊரே போகும். கோடை காலம் வந்துவிட்டால், அவர்கள் பயிருக்கு தண்ணீர் கொடுக்க முடியாத அளவிற்கு ஊர்காரர்கள் தண்ணீரை வழித்து எடுத்துச் சென்றுவிடுவார்கள். இவர்களை கட்டுப்படுத்த வழியை அடைத்துப் பார்த்தார்கள். காவலுக்கு இருந்து பார்த்தார்கள். திட்டிப்பார்த்தார்கள். உஷும். பலனில்லை. கடைசியாக ஒரு வழியை கண்டுபிடித்தார்கள்.
ஒரு குடம் தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால், 25 பைசா தரவேண்டும் என்று சொல்லி வசூலிக்க ஆரம்பித்தார்கள். இந்த திட்டத்துக்கு கைமேல் பலன் கிடைத்தது. காசு கொடுத்து யாரும் தண்ணீர் எடுக்க தயாராக இல்லை.
கோடை காலம் முடிந்தது. தண்ணீர் பெருகியதும் காசு வசூலிப்பதை விட்டுவிட்டார்கள்.
சில வருடங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் வந்தது. தேர்தலில் செல்வின் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டார். உள்ளூர்காரரான எனக்கு நீங்கள் ஒட்டுப்போடுங்கள் என்று வீடு வீடாக சென்று கேட்டார். ஊர்காரர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக அவரை புறக்கணிக்க முடிவு செய்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்... குடிக்கிற தண்ணீருக்கே காசு கேட்டவனுக்கு எப்படி ஓட்டுப் போட முடியும் ... என்பதுதான்.
தேர்தலில் அவர் தோற்றுப் போனார். வடமலைப்பட்டியைச் சேர்ந்த சங்கரபாண்டியன் என்பவர் ஜெயித்தார். அவர் என் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர்.
தண்ணீர் பாக்கெட்டுக்கு காசு கொடுத்த போது, செல்வின் ஞாபகம் தானாகவே எனக்கு வந்தது. ஒரு குடம் தண்ணீருக்கு 25 காசுக்கே இத்தனை பிரச்சனை செய்தார்கள். இங்கே 100மில்லி தண்ணீருக்கே ஒரு ரூபாய் கேட்கிறார்களே என்று தோன்றியது. தண்ணீருக்கு காசு கேட்கும் இந்த ஊரை விட்டுவிட்டு கிராமத்துக்கே போய்விடலாம் என்று தோன்றியது.காலம் ஓடிவிட்டது. பத்தாண்டுக்கு பிறகு ஊருக்கு போன போது சொன்னார்கள்... "பண்ணத்தை தண்ணீ மாதிரி பாத்து செல்வு பண்ணு." இனி ஒருவேளை செல்வின் பஞ்சாயத்து தலைவராகலாம். அப்போது தண்ணீர் ஒரு பிரச்சனையாக இருக்காது என்று எனக்குத் தோன்றியது.